காமராஜர் துறைமுகம் 10 கோடி டாலர் கடன் திரட்டியது
சென்னை : சென்னை அருகே, எண்ணுாரில் உள்ள காமராஜர் துறைமுகம், அதன் விரிவாக்கத் திட்டத்திற்காக, ஆக்சிஸ் வங்கியிடம் இருந்து, 10 கோடி டாலர் கடன் திரட்டி உள்ளது.இது குறித்து, காமராஜர் துறைமுகத்தின் தலைவர், எம்.ஏ.பாஸ்கராச்சார் கூறியதாவது:மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘துறைமுகங்கள் வாயிலான, அன்னிய செலாவணி வருவாயை அதிகரிக்க, குறைந்த வட்டியில், அன்னிய செலாவணி கடன் பெற வேண்டும்’ என, தெரிவித்து உள்ளார்.இதையடுத்து, கடனுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் பங்கேற்ற வங்கிகளில், ஆக்சிஸ் வங்கி, மிகவும் குறைவாக, 3.15 சதவீத வட்டியில், ஐந்து ஆண்டுகளில் திரும்ப அளிக்கும் வகையில், 10 கோடி டாலர் கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதை, துறைமுக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.இந்த கடன் தொகையில், துறைமுகத்தின் ஆழம், தற்போதைய, 16 மீட்டரில் இருந்து, 18 மீட்டராக அதிகரிக்கப்படும். இதன் மூலம், மிகப்பெரிய சரக்கு கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த முடியும். இதனால், சரக்கு கையாளும் செலவு பெருமளவு குறையும். இத்துடன், தமிழக மின் வாரியத்திற்காக, புதிய நிலக்கரி இறக்குமதி தளம், பொதுவான சரக்கு தளம் மற்றும் மூன்று லட்சம் கார்களை கையாளக்கூடிய, இரண்டாவது வாகன ஏற்றுமதி முனையம் ஆகியவையும் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.