உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு
மும்பை : மத்திய அரசு, உணவு பதப்படுத்துதல் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி டாலர் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.இதை, மும்பையில் நடைபெற்ற சர்வதேச உணவு மாநாட்டில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டு, பன்முக பிராண்டு உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இத்துறை, 40 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.அடுத்து, பண்ணைப் பொருட்கள் உற்பத்தி முதல், விற்பனை வரையிலான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செயல்பாட்டுக்கு வந்தால், மிகப்பெரிய அளவில், அன்னிய முதலீடு குவியும்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, உணவு பதப்படுத்துதல் துறையில், 1,000 கோடி டாலர், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.உணவு பதப்படுத்துதல் துறையில், அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களால், விவசாயிகள், தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற முடியும். மேலும், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் அன்னிய செலாவணி வருவாய் உயரும்.இதற்காக, மத்திய அரசு, 6,000 கோடி ரூபாய் முதலீட்டில், ‘விவசாயிகள் பண்ணை திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், உணவு பதப்படுத்துதல் துறையில், தற்போது உள்ள திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் ஒன்றிணைக்கப்படும்.இத்திட்டத்தில், 20 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். 2019 – 20ம் நிதியாண்டில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 5,30,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளன. குறிப்பாக, நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், இந்தியாவில் கூட்டாக முதலீடு செய்வது குறித்து விசாரித்து வருகின்றன.இதுவரை, 42 உணவு பூங்காக்கள், 100 குளிர்சாதன கிடங்குகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 10 பெரிய உணவு பூங்காக்கள் மற்றும் 30 குளிர்சாதன கிடங்குகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. எஞ்சியவை, அடுத்த இரு ஆண்டுகளில், பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்., முதல், தற்போது வரை, உணவு பதப்படுத்துதல் துறையின் ஏற்றுமதி, 100 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மத்திய அரசு, நவ., 3 -– 5 வரை, டில்லியில், சர்வதேச உணவு மாநாட்டை நடத்த உள்ளது. இதில், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த, சர்வதேச நிறுவனங்கள் பங்கு கொள்ள உள்ளன. இந்த மாநாடு, உணவுத் துறையில் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படவும், அவற்றின் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவும்.ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்