இளம் தமிழ் நடிகையின் தாயை பல்சர் சுனில் கடத்தியது ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இளம் தமிழ் நடிகையின் தாயை பல்சர் சுனில் கடத்தியது ஏன்?

திருவனந்தபுரம் : ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதற்காகவே கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகையை பல்சர் சுனில் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையே மேலும் ஒரு நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல நடிகையை கடத்தி ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமா உலகை சேர்ந்த இளம் இயக்குனரின் மனைவியை கடத்த திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ஆள் மாறி தமிழ் சினிமாவில் முன்னணியாக உள்ள இளம் நடிகையின் தாயும், நடிகையுமான ஒருவரை பல்சர் சுனில் கடத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக அப்போது போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் முறையான விசாரணை நடைபெறவில்லை. இந்த நிலையில் பல்சர் சுனில் தான் அந்த நடிகையை கடத்தினார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோனி சாகரிகா அளித்த புகாரின் பேரில், பல்சர் சுனில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் பல்சர் சுனிலை காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதற்காகவே கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகையை பல்சர் சுனில் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் பல்சர் சுனிலே நேரடியாக ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

இதற்கிடையே மயிரிழையில் கடத்தலில் இருந்து தப்பிய இயக்குனரின் மனைவியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.

திலீப் மானேஜர் முன்ஜாமீன்

நடிகர் திலீப்பின் மானேஜர் அப்புண்ணி தொடர்ந்து தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என போலீசாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதற்கிடையே முன்ஜாமீன் கோரி அப்புண்ணி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பல்சர்சுனில் வக்கீல் கைது

பல்சர் சுனிலுக்காக முதலில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதீஷ் சாக்கோ, உயர்நீதிமன்ற உத்தரவுபடி நேற்று ஆலுவா போலீஸ் கிளப்பில் விசாரணைக்காக ஆஜரானார். காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து 10 மணி நேரம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது.

நடிகையின் ஆபாச படத்தை எடுத்த செல்போன், மெமரி கார்டு எங்கு உள்ளது என்று அவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து இரவு 8 மணியளவில் வக்கீல் பிரதீஷ் சாக்கோவை கைது செய்தனர்.

பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

.

மூலக்கதை