துணை ஜனாதிபதி தேர்தல் காங். வேட்பாளரை ஆதரிக்க பட்நாயக் முடிவு
புவனேஸ்வரம் : துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது.
அவ்வப்போது பாஜவுடன் நெருக்கம் காட்டி வரும் நவீன் பட்நாயக், காங்கிரஸ் கட்சியுடனும் நட்பை பராமரித்து வருகிறார். இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிப்பதாக நவீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோபால கிருஷ்ண காந்திக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என்றார்.
இதை அவரது கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும் பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிடமும் நெருக்கம் காட்டாமல் மிகச் சரியாக உறவை நவீன் பட்நாயக் பராமரித்து வருகிறார் என பிஜூ ஜனதா தள கட்சி செய்தி தொடர்பாளர் கைலாஷ் சிங்தியோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிஜூ ஜனதா தளம் நடுநிலையோடு செயல்படுகிறது என்பதை நவீன் நிரூபித்துள்ளார் என்றும் அவர் சுட்டி காட்டினார்.
நவீன் பட்நாயக்கின் இந்த ஆதரவை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.