சிறுதொழில்களுக்கு ரொக்கமில்லா பரிவர்த்தனை
நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் வகையில் முயற்சிகளை மேற்கொள்வது பலனளிக்கும் என, போஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ரொக்கமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போஸ்டன் கன்சல்டிங் குரூப், 1,700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்தியில், ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. துவக்கத்தைவிட முதல் ஆறு மாதங்களுக்குள், 22 சதவீத நிறுவனங்கள், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை முறையை சாதகமாக கருதுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. எனினும் நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில், 50 சதவீதத்திற்கும் மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு திரும்புவதை விரும்புவதாக தெரிவித்துள்ளன.
எனவே, நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் முயற்சிகள், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு அதிகம் பயனளிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. லாபம் பாதிக்கப்படும் எனும் அச்சம், போதிய விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள், சிறுதொழில் நிறுவனங்களுக்கு தடையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.