பலாத்காரம் செய்துவிட்டார்’ 24 வயதான தனது கணவர் மீது 44 வயது ஜெர்மனி பெண் புகார்
புதுடெல்லி: சமூக வளைதளம் மூலம் 24 வயது இந்தியரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட 44 வயது ஜெர்மனி பெண், தனது கணவர் தன்னை வலுகட்டாயமாக பலாத்காரம் செய்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 44 வயது பெண், டெல்லி போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், பஞ்சாப்பை சேர்ந்த 24 வயது வாலிபருடன் பேஸ்புக் மூலம் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் காதலித்ததை தொடர்ந்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். அதன்பின் தனது கணவர் வீட்டினருடன் வசித்து வந்தபோது, தனது அனுமதியின்றி கணவன் தன்னை வலுகட்டாயமாக பலாத்காரம் செய்ததாகவும், தனது மாமனார் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். மேலும் திருமணம் ஆனது முதல் கணவர் தன்னை மிக மோசமாக நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இருவரும் ஜெர்மனி செல்ல முடிவெடுத்ததால், விசா நடைமுறைகளை மேற்கொள்ள டெல்லி வந்து, பகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், இதில் கன்னாட் பிளேஸ் சென்றபோது வழி தவறியதாகவும் தெரிவித்தார். பிரச்னையின் தீவிரத்தை புரிந்து கொண்ட போலீசார், பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், பெண்ணின் மாமனார் பெயர் சேர்க்கப்படவில்லை. விரைவில் பெண்ணை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, வாக்குமூலம் பதிய உள்ள போலீசார், உண்மையில் இருவரும் கணவன்- மனைவி தானா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர்.