பிஎஸ்எல்வி - சி38 ராக்கெட் 31 செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பயணம்: இன்று காலை கவுன்ட் டவுன் துவங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிஎஸ்எல்வி  சி38 ராக்கெட் 31 செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பயணம்: இன்று காலை கவுன்ட் டவுன் துவங்கியது

சென்னை: கார்ட்டோசாட்-2 மற்றும் 14 நாடுகளில் இருந்து 29 வெளிநாட்டு செயற்கைகோள், ஒரு தமிழக நானோ செயற்கைகோள் என 31 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் நாளை காலை 9. 29க்கு ஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 5. 29 மணிக்கு துவங்கியது.

இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செயற்கைகோள்களை செலுத்தி ஆராய்ச்சி செய்து வருகிறது.

கடந்த 5ம் தேதி அடுத்த தலைமுறைக்கான ஜிஎல்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் - 9 செயற்கைகோளை விண்ணில் ெசலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.   இந்நிலையில், பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் மூலம், கார்ட்டோசாட்-2 செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இது புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளாகும். இந்த செயற்கைகோள் வான் வழி போக்குவரத்து, கடல் போக்குவரத்து உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வர்த்தக ரீதியாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லத்வியா, லூதியானா, ஸ்லோவாகியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 29 நானோ வகை செயற்கைகோள்களும், தமிழகத்தில் கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு நானோ செயற்கைகோளும் அனுப்பப்படுகிறது.   பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் கார்டோசாட் -2 உள்பட 31 செயற்கைகோள்களையும் சுமந்து கொண்டு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை காலை 9. 29 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 28 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 5. 29 மணிக்கு துவங்கியது.

இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ராக்கெட் புறப்பட்ட 23வது நிமிடம் 18வது நொடியில், 31 செயற்கைகோள்களும் அதன் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்படும்.

நாளை விண்ணில் செலுத்தப்படும் செயற்கைகோள்களில் கார்டோசாட்-2 தான் முதன்மை செயற்கை கோளாகும். இதன் எடை 712 கிலோ.

இதில் 986 வாட்ஸ் கொண்ட அதிநவீன சோலார் பேனல்கள் உள்பட பல்வேறு நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

.

மூலக்கதை