15 குட்டிகளுடன் நாகபாம்பை கொன்று எரிப்பு
திருமலை: மாந்தோப்பில் காவலாளியை கடிக்க முயன்ற நாகபாம்பை 15 குட்டிகளுடன் கொன்று சிலர் தீ வைத்து எரித்தனர். இதனால் நாகதோஷம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தின்னபல்லி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் காவலாளியாக இருப்பவர் பெத்தப்பா(60). நேற்று மதியம் மாந்தோப்பில் இருந்த பெத்தப்பாவை நாகப்பாம்பு கடிக்க வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அலறியபடியே ஓடினார். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு அங்கிருந்த புற்றை இடித்தனர்.
அதில் நாகபாம்பு 15 குட்டிகளுடன் இருப்பதை பார்த்த அதிர்ச்சியில் பதறியடித்து ஓடினர்.
அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து நாகபாம்பை அடித்து கொன்றனர். பின்னர் குட்டிகளுடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டனர்.
நாகபாம்பை தெய்வமாக வழிபடும் நிலையில் அவற்றை தீ வைத்து எரித்ததால் நாகதோஷம் ஏற்படும் என்று கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எனவே இதற்கு உரிய பரிகாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
.