இஃப்தார் விழாவை புறக்கணித்த எம்.எல்.ஏக்கள் : ...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைப்பெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்யை தினகரன் ஆதரவு எம். எல். ஏக்கள் அனைவரும் புறக்கணித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரனை, பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் உட்பட 35 எம். எல். ஏக்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, தினகரனுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அந்நிலையில், அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடத்தப்படும் இப்தார் இந்த முறை ஜூன் 21 (இன்று) மாலை நடைபெறவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், அதற்கான அழைப்பிதழில், அந்த நிகழ்ச்சி, தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தினகரன் ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்ததாக செய்திகள் வெளியானது.
எனவே, அந்த நிகழ்ச்சியில், தினகரன் ஆதரவு எம். எல். ஏஎக்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த விவகாரம் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பிலும், எடப்பாடி தலைமையிலும் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தினகரன் ஆதரவு எம். எல். ஏக்கள் 35 பேரும் கலந்து கொள்ளவில்லை.
இதன் மூலம், அந்த 35 எம். எல். ஏக்கள், தினகரனின் பக்கம் வலுவாக நிற்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.