சாய்னா, காந்த் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் 2வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் கொரியாவின் சுங் ஜி ஹையுனுடன் நேற்று மோதிய சாய்னா 21-10 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-10, 21-16 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய கிடாம்பி காந்த் 21-13, 21-16 என்ற நேர் செர்களில் சீன தைபே வீரர் கான் சவோ யூவை வீழ்த்தினார். இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவுடன் மோதிய சாய் பிரனீத் 10-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய மற்ற இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரனாய், பாருபள்ளி காஷ்யப், அஜய் ஜெயராம் ஆகியோர் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினர். ஆண்கள் மற்றும் மகளிர் இரட்டையர் ஆட்டங்களிலும் பிரான்சிஸ் ஆல்வின் - தருண் கோனா, மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி ஜோடிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

மூலக்கதை