பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020-லும், செவ்வாய்க்கு 2025-க்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என்று ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கூறியுள்ளார்.
 
உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்த விவகாரம் எதிரெதிர் நாடுகளை ஒன்றிணைத்து, எதிர்வரும் பெரும் பிரச்சனையை ஒன்றிணைந்து கையாள வழிவகை செய்யும் என்று நம்புவதாகக் கூறினார். மனித இனம் பூமியில் அதிக காலம் வாழ முடியாது. ஏனென்றால், பூமி, ஆஸ்ட்ராய்டு என்று அழைக்கப்படும் பெரிய விண் பாறைகளால் மோதப்படவும், நம் சூரியனாலேயே விழுங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பூமி முழுவதும் அழிந்துவிடும். எனவே தொலைதூர கிரகங்களுக்கு செல்வதே மனித இனத்தின் அழிவைத் தடுக்க ஒரே வழி என்று கூறுகிறார்.
 
விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளான ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் காஸ்மோலஜி உள்ளிட்ட படிப்புகளை இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் கற்க வேண்டும். மனித இனத்தின் இந்த தொலைதூரப் பயணமானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவது பூமியை அச்சுறுத்துவதாக உள்ளது.
 
நாம் பூமியை விட்டு கட்டாயம் செல்லவேண்டும். வேறொரு சூரியனைக் கொண்ட கிரகத்தைக் கண்டறிந்து, அங்கு சென்று வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், யாருமே போகாத கிரகத்தில் நாம் சென்று வாழ வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். இன்னும் 30 வருடங்களில் பூமியிலிருந்து வெளியேற ஏதுவாக, லூனார் பேஸ் என்று கூறப்படும் விண்வெளி காலனிகளை விஞ்ஞானிகள் அமைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை