இங்கிலாந்து அரசி எலிசபத்தின் கணவர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி: பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபத்தின் கணவர் பிலிப்(96) முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அரசி ராணி எலிசபத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இளவரசர் பிலிப் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 96 வயதாகும் இளவரசர் பிலிப்புக்கு கடந்த 2013 ஜூன் மாதம் வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு பெரிய அளவிலான உடல்நலக்குறைவு எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சிறிய உடல் உபாதைகளால் அவர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு, அதற்கான தொடர் சிகிச்சைகள் பெற்று வந்தார். இருப்பினும், பக்கிங்ஹாம் அரண்மனை சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார். நோய்த்தொற்று அறிகுறிகளால் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மூலக்கதை