கோடநாடு எஸ்டேட் மேல் பறந்த ‘ஹெலிகேம்’: உளவுபார்க்க அனுப்பப்பட்டதா?
கோத்தகிரி: கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த காவலாளி கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், எஸ்டேட் பகுதியில் டிரோன் பறந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெ. வுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பகுதியில் நேற்று பகல் 2 மணியளவில் வானில் டிரோன் எனப்படும் ஹெலிகேம் வட்டமடித்தது.
மர்ம நபர்கள் கோடநாடு எஸ்டேட்டை படம் பிடிப்பதாக எஸ்டேட் நிர்வாகம் சார்பில் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்று போலீசார் எஸ்டேட்டை படம் பிடித்துக் கொண்டிருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
கேமராவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஜெ. வுக்கு சொந்தமான எஸ்டேட்டுக்கு அருகே மற்றொரு எஸ்டேட்டை மும்பையை சேர்ந்த யகிவர்தன்(27) என்பவர் வாங்கி இருந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த விஷயத்துக்காகவும், அந்த நிலத்தை விற்கவும் விடியோவாக படம் பிடித்தது தெரியவந்தது. மேலும் ஹெலிகேமராவில் பதிவாகி இருந்த படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கோடநாடு எஸ்டேட் பதிவு செய்யப்படவில்லை என உறுதி செய்த போலீசார் ஹெலிகேம் மற்றும் படம் பிடித்த குழுவினரை எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.
.