ஐ.எஸ் அமைப்பின் தலைமை மதகுரு படுகொலை!
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை மதகுரு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர். மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினரும் அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இதனிடையே ரஷ்ய கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
ஆனால் குறித்த தகவலுக்கு இதுவரை ஐ.எஸ் இயக்கம் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை மதகுரு துர்கி பினாலி, கடந்த மே மாதம் சிரியாவின் மயாதீன் நகரில் பதுங்கியிருக்கும் போது, அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.