பாஜ ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு 2019 பார்லி. தேர்தல் வெற்றிக்காக தலித்துகளை குறிவைக்கும் முயற்சி: தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு 2019 பார்லி. தேர்தல் வெற்றிக்காக தலித்துகளை குறிவைக்கும் முயற்சி: தொல்.திருமாவளவன் அறிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தலித் சமூகத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்தை பாஜ அறிவித்துள்ளது.   தலித் மற்றும் பழங்குடியினரின் மதமாற்றத்தைத் தடுக்கவும், பாஜவுக்கு எதிரான தலித் மக்களின் எதிர்ப்பு நிலையை நீர்த்துப்போகச் செய்யவும்தான் தலித்துகளைக் குறிவைத்து பாஜ செயல்பட்டு வருகிறது.   அதற்குச் சான்றாகவே இந்தத் தேர்வு. பாஜ தனது வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தலித் வேட்பாளர் ஒருவரை அறிவிக்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஆனால், பாஜ வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருந்தது, இப்போது எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எதிர்க்கட்சிகளின்  பொதுவேட்பாளராக தலித் ஒருவரை அறிவிக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாஜவால் முன்மொழியப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், கே. ஆர். நாராயணன் போல ஒரு அம்பேத்கரியவாதி அல்ல. அவர் முழுக்கமுழுக்க பாஜவின் கெள்கைகளை உயர்த்திப்பிடிப்பவர்.

2019 தேர்தலிலும் வெற்றிபெறவேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் பாஜ தலித் ஆதரவு தோற்றத்தை முன்வைத்து வருகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதனை முறியடிக்கும் வகையில் தலித் மக்களுக்கு ஆதரவான உத்திகளை வகுப்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவேண்டும்.


.

மூலக்கதை