ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய நட்சத்திரங்கள் முனைப்பு
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். சமீபத்தில் நடந்த இந்தோனேசியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி காந்த், அரை இறுதிவரை முன்னேறிய எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்ற சாய் பிரனீத் ஆகியோர், ஆஸி. ஓபனில் இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சாய்னா நெஹ்வால், ரியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி,சிந்து இருவரும் உற்சாகமாக களமிறங்குகின்றனர். இந்தோனேசியன் ஓபனில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இவர்கள், ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடும் உறுதியுடன் உள்ளனர். இவர்களுடன் சமீர் வர்மா, அஜய் ஜெயராம், ஆண்கள் இரட்டையர் பிரிவி மனு ஆத்ரி, சுமீத் ரெட்டி, மகளிர் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஆகியோரும் நம்பிக்கையுடன் பங்கேற்கின்றனர். இன்று தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.