சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் !!

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் !!

சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சமாக தலா ரூ.6 கோடி வழங்கப்பட்டதாக வெளியான ரகசிய வீடியோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அ.தி. மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மு.க.ஸ்டாலின்

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கேள்வி நேரம் 11.08 மணிக்கு முடிவடைந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கிய பிரச்சினை குறித்து பேச தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

கோர்ட்டில் உள்ள வழக்கு

மு.க.ஸ்டாலின்:-ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள....

சபாநாயகர்:-இதை பற்றி இங்கு விவாதிக்க முடியாது. கோர்ட்டில் இருக்கும் எந்தவொரு விஷயமும் இங்கே விவாதிக்க அனுமதியில்லை. அதற்கு அவை விதியும் அனுமதிக்காது. நீங்கள் தான் (தி.மு.க.) கோர்ட்டுக்கு சென்று இருக்கிறீர்கள். கோர்ட்டில் இருக்கும் வழக்கை பற்றி இங்கு பேசலாமா? கோர்ட்டில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம்.

இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக அவர்கள் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்து கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

சபாநாயகர்:-பத்திரிகைகளில் வரும் செய்திகளை கொண்டு இங்கே பேசக்கூடாது. நீங்கள் அமைதியாக இருங்கள்.

இதை ஏற்காமல் தி.மு.க.வினர் மீண்டும் கோஷமிட்டவாறு இருந்தனர். இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துரைமுருகன் தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஜனநாயக படுகொலை

துரைமுருகன்:-தமிழகமே இன்றைக்கு தலை குனிந்து இருக்கிறது.

சபாநாயகர்:- போதும். இதற்கு மேல் யாரும் பேச வேண்டாம். நான் அடுத்த நிகழ்வுக்கு செல்ல வேண்டும். இருக்கையில் அமருங்கள். கோர்ட்டில் உள்ள விஷயத்தை இங்கே பேசக்கூடாது என்று விதிமுறை இருக்கிறது என்று நான் கூறியும் நீங்கள் கேட்காமல் இருப்பது ஏன்?

மு.க.ஸ்டாலின்:-இந்த வழக்கு தற்போது எடுத்துக்கொள்ளப்படவில்லை. 16-ந்தேதிதான் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. எனவே பேச அனுமதிக்க வேண்டும்.

சபாநாயகர்:-தவறாக கூற வேண்டாம். நீங்கள் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறீர்கள். அந்த வழக்கு தற்போது கோர்ட்டு அலுவலில் உள்ளது. சட்டசபை விதி 92-ன்படி கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும் பொருள் பற்றி கூட இங்கு பேச அனுமதி இல்லை.

இதனால் மீண்டும் சபாநாயகருடன் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டவாறு இருந்தனர்.

தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். எம்.எல்.ஏ.க்கள் பார் சேல் (எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு), ரூ.10 ஆயிரம் கோடி, கலைத்து விடு...கலைத்து விடு... தமிழக அரசை கலைத்து விடு, ஜனநாயக படுகொலை என்று எழுதப்பட்ட காகிதங்களை கைகளில் ஏந்தி, சபாநாயகரை நோக்கி காட்டினர்.

ரூபாய் நோட்டுகளை காட்டிய தி.மு.க. உறுப்பினர்

அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் புகழேந்தி (மதுராந்தகம்) தனது சட்டை பையில் இருந்து 100 ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்த திசை நோக்கி காட்டினார். சில உறுப்பினர்கள் ஆங்கில பத்திரிகையை கொண்டு வந்து காட்டினர். இதையெல்லாம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கண்டும் காணாதது போல் இருந்தனர்.

சபாநாயகர்:-நீங்கள் இது போன்று நடந்துகொள்ளக்கூடாது. கோர்ட்டுக்கு நீங்கள் செல்லாமல் இருந்திருந்தால் இதை பற்றி பேச அனுமதி வழங்கியிருப்பேன்.

இந்த நேரத்தில் துரைமுருகன் எழுந்து, தங்களுக்கு (சபாநாயகர்) ஒரு யோசனை கூற விரும்புகிறேன் என்றார்.

துரைமுருகன் யோசனை

சபாநாயகர்:- சொல்லுங்கள்.

அப்போது துரைமுருகன், சபாநாயகர் குறித்தும், அரசை பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகர்:- எனக்கு ஆலோசனை வழங்குவதாக கூறி விட்டு ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்வது நியாயமா?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-ஒரு மூத்த உறுப்பினர் இப்படி பேசுவது முறையல்ல. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

(அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் கோஷம் எழுப்பினர்.)

கூச்சல், குழப்பம்

அமைச்சர் தங்கமணி:- 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அ.தி.மு.க. உறுப்பினர் ஒரு வழக்கு தொடர்பாக பிரச்சினை எழுப்பிய போது, வழக்கு பற்றி அவையில் பேசக்கூடாது என்று கூறியவர் முன்பு அமைச்சராக இருந்த இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் தான். அதை முன் உதாரணமாக வைத்து வேறு பிரச்சினை பற்றி பேசுங்கள். இதே கருத்தை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்தார்.

சபாநாயகர்:-பத்திரிகை, தொலைக்காட்சியில் வருவது பற்றி இங்கு விவாதிக்க முடியாது. ஆதாரத்தை கொடுத்துவிட்டு விவாதிக்க வேண்டும்.

உடனே தி.மு.க. உறுப்பினர்கள், காப்பாற்று... காப்பாற்று ஜனநாயகத்தை காப்பாற்று..., தமிழக அரசே ராஜினாமா செய் என்று கோஷம் எழுப்பினர். ஒரே நேரத்தில் கோஷம் எழுப்பப்பட்டதால் யார்? என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை.

அரசுக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு விதமான கோஷங்கள் எழுப்பியபோதும், ஆளுங்கட்சி வரிசையில் எந்த சலனமும் இல்லை. இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் சபாநாயகரை நோக்கி கைகளை நீட்டி ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு மைக் வழங்கப்படாததால் அவர்களின் பேச்சுகள் பதிவாகவில்லை.

45 நிமிடம் முடங்கியது

கோஷமும், அமளியும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் 11.29 மணியளவில் சபாநாயகர் அடுத்த நிகழ்வுக்கு செல்ல இருப்பதாக அறிவித்தார்.

ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள், இந்த பிரச்சினை குறித்து விவாதித்து விட்டு அடுத்த நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர். கூச்சல், குழப்பம், அமளிக்கு இடையே, ஜி.எஸ்.டி. மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சர் கே.சி.வீரமணியை சபாநாயகர் அழைத்தார்.

அதனை தொடர்ந்தும் அமளி நீடித்ததால் சபாநாயகர், மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதாக அறிவித்தார். மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் உதயசூரியனை பேசும்படி கூறினார்.

ஆனால் இதனை தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் கேட்கவில்லை. பணப்பேரம் குறித்து விவாதித்து விட்டு, அடுத்த நிகழ்வுக்கு செல்லுங்கள் என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 11.53 வரை சுமார் 45 நிமிடம் அவை நடவடிக்கையை தி.மு.க. உறுப்பினர்கள் முடக்கினர்.

வெளியேற்ற உத்தரவு

சபாநாயகர்:-நான் பல முறை கூறி விட்டேன். இனி நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறி விட்டேன். அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர்களை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.

(வழக்கமாக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றும் போது ஒரே உத்தரவில் சபாநாயகர் அதை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் சபாநாயகர் நேற்று அவ்வாறு செய்யாமல், அவைக்குள் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பெயரை வாசித்து அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.).

அவைக்காவலர்கள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற வந்தபோது, நாங்களாகவே வெளியேறிக்கொள்கிறோம் என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் எந்தவித பிரச்சினையும் செய்யாமல், முரண்டு பிடிக்காமல் அமைதியாக அவையில் இருந்து வெளியேறினர்.

தி.மு.க.வை வெளியேற்றியதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.

பின்னர் சபாநாயகர் பேசினார்.

திட்டமிட்ட செயல்

சபாநாயகர்:- இந்த அவையை நான் அமைதியாக நடத்தி செல்லவே விரும்புகிறேன். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் பரிசீலிக்கிறோம் என்றோம். அதை அவர்கள் ஏற்கவில்லை. 11-1-2011-ம் ஆண்டு நீராராடியா தொலைபேசி உரையாடல் பிரச்சினை தொடர்பாக பத்திரிகையில் வந்த செய்தியை காட்டி இந்த சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேட்டபோது, அன்றைய சபாநாயகர் அனுமதி அளிக்க முடியாது என்று கூறினார். அன்றைக்கு நீங்களே(தி.மு.க.) இப்படி கூறி விட்டு இப்போது நீங்கள் பேசுவதில் என்ன நியாயம்?. தி.மு.க. உறுப்பினர்கள் இன்றைக்கு திட்டமிட்டே இது போன்று நடந்து இருக்கிறார்கள்.

இவ்வாறு கூறிய சபாநாயகர், மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அ.தி.மு.க. உறுப்பினரை பேச அழைத்தார்.

சாலை மறியல்

இதற்கிடையே, சட்டசபை வளாகத்தை விட்டு வெளியில் வந்த தி.மு.க. உறுப்பினர்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்திற்கு வெளியே ராஜாஜி சாலையில் ஒன்று திரண்டனர். பிறகு அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கைது-விடுதலை

தமிழக அரசையும், சபாநாயகரையும் கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்தது. இதனால் ராஜாஜி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உயர் போலீஸ் அதிகாரிகள் மறியல் நடந்த இடத்துக்கு வந்து மு.க.ஸ்டாலினுடன் பேச்சு நடத்தினார்கள். சாலை மறியலை கைவிடும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சாலை மறியலை கைவிட தி.மு.க. உறுப்பினர்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. உறுப்பினர்களை போலீசார் 6 போலீஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் இல்லாததால், எதிர்கட்சிகள் இல்லாமலேயே வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருமே இல்லாமலேயே அமைச்சர்களும் பதிலுரை வழங்கி, புறப்பட்டு சென்றனர். 

மூலக்கதை