சட்டசபையில் இன்று மீண்டும் குரல் கொடுப்போம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டசபையில் இன்று மீண்டும் குரல் கொடுப்போம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டா லின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு மதியம் 3.15 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

மீண்டும் எழுப்புவோம்

கேள்வி:- சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அ.தி.மு.க. அரசு இப்படி நடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் அவை எப்படி நடக்கும்?

பதில்:- எங்களை எல்லாம் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியதால், அதனை கண்டிக்கும் வகையில் சாலை மறியலில் நாங்கள் ஈடுபட்ட காரணத்தினால், கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். சட்டமன்றம் நடந்து முடிந்த பிறகு இப்போது எங்களை விடுதலை செய்திருக்கிறார்கள்.

நாளை(இன்று) காலையில் நாங்கள் சட்டமன்றத்துக்குச் சென்று, இந்தப் பிரச்சினையை மீண்டும் சட்டப்பேரவையில் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிச்சயம் குரல் கொடுப்போம்.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த ஆட்சியாளர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களே, இனி எப்படி அவை நடக்குமோ என்று அனைவரும் கேட்கக்கூடிய வெட்கக்கேடான நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில்...

கேள்வி:- தி.மு.க. ஆட்சியில் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நாங்களும் செய்கிறோம் என்று அ.தி.மு.க.வினர் தெரிவிக்கிறார்களே?

பதில்:- தி.மு.க.வினர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றனவே தவிர, ஜெயலலிதா போன்று, அதேபோல இன்றைக்கு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்று 4 வருட சிறைத்தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட வரலாறு, அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடந்துள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக கைது ஆனபோது மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

காமெடி போல் இருக்கிறது

கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில் யார் யாருக்கெல்லாம், பல கோடி ரூபாய்கள் பேரம் பேசப்பட்டது என்பதை அ.தி.மு.க.வை சார்ந்து இருக்கக்கூடிய, கனகராஜ் மற்றும் சரவணன் என்ற இருவரின் பேட்டியை, ஆங்கில தொலைக்காட்சி பதிவு செய்து, இரு நாட்களாக வெளியிட்டு வருகிறது.

அதில், யார் யாருக்கெல்லாம் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களே தெரிவித்து இருக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சரவணன், அதில் பேசியிருப்பது நான் இல்லை, என்று காலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கிறார். ஆனால், மாலையில், அது நான் தான், என்று ஒப்புக்கொண்டு, ஆனால் என் குரல் அல்ல, என்றும் தெரிவித்து இருக்கிறார்.

போட்டு இருக்கும் சட்டை என்னுடையது, ஆனால் அது நானில்லை, என்று திரைப்படங்களில் வரும் காமெடி காட்சி போல, அவர் பேட்டி தந்திருக்கிறார்.

சி.பி.ஐ. விசாரணை

குதிரை பேரத்தின் அடிப்படையில் தான் இந்த அரசு சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை, அ.தி.மு.க.வின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள வாக்குமூலம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.

எனவே, இந்த ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும், ராஜினாமா செய்ய வேண்டும், கவிழ்க்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் யார்? யார்? சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், எங்கெங்கு பணம் பேரம் பேசப்பட்டு, வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறித்து, அரசே முன் வந்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்று எடுத்துச் சொல்லும் வகையில் தான் இந்த பிரச்சினையை நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி எழுப்ப முயற்சித்தோம்.

வெளியேற்றி இருக்கிறார்

ஆனால், நான் பேசுவதற்கு அவர்கள் திட்டவட்டமாக அனுமதி மறுத்தனர். தொடர்ந்து நாங்கள் குரலெழுப்பிப் போராடியும் அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், சபாநாயகர் எங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கின்றார்.

ஏற்கனவே, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சர்வாதிகாரத்தோடு இந்த ஆட்சி நடப்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு, நீட் பிரச்சினை என பல பிரச்சினைகளும் நீதிமன்றத்தில் உள்ளன. நீட் பிரச்சினை நீதிமன்றத்தில் இருந்த நேரத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாங்களும் அதற்கு ஏகமனதாக வரவேற்பு தந்திருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இதுகுறித்து நாங்களே நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். ஆங்கில தொலைக்காட்சியில் வந்த பிறகு நான் வழக்கு தொடர்ந்தேன்.

உலகம் அறிந்த செய்தி

ஏற்கனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அந்த வழக்கு வரும் ஜூலை மாதம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, ஆங்கில தொலைக்காட்சி செய்தி வந்த பிறகு தொடரப்பட்ட வழக்கில், அந்த வழக்கையும் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நாட்டுக்கே அனைத்தும் தெரிந்தவைதான். உலகம் முழுவதும் அந்த செய்தி பரவி, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

மூலக்கதை