83 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடவடிக்கை; மேட்டூர் அணையை தூர்வாரும் பணி

PARIS TAMIL  PARIS TAMIL
83 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடவடிக்கை; மேட்டூர் அணையை தூர்வாரும் பணி

83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரப்படுகிறது. அணையில் தூர்வாரும் பணியை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

மேட்டூர்,

கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் 120 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியும். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை தூர்வாரப்படவில்லை. அணையில் வண்டல் மண் தேங்கியதால், கொள்ளளவு குறைந்து உள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரப்படுகிறது. அணையில் தூர்வாரும் பணியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11.20 மணிக்கு தொடங்கிவைத்தார். தூர்வாரப்படும் இடத்தின் அருகில் ஹோமம் வளர்த்து பூஜை நடத்தப்பட்டது. தூர்வாரப்படும் இடத்தில் 100-க் கும் மேற்பட்ட டிராக்டர்கள், 20-க்கும் மேற்பட்ட பொக் லைன் எந்திரங்கள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை ஒரு சட்டியில் எடுத்து, அதை ஒரு பெண் விவசாயியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, தூர் வாரும் பணியை தொடங்கிவைத்தார்.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், டாக்டர் வி.சரோஜா, எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், மனோன்மணி, வெற்றிவேல், சக்திவேல், சின்னதம்பி, மருதமுத்து, ராஜா, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் மற்றும் உயர் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியின் வலதுகரை பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, அச்சங்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும், நீர்த்தேக்க பகுதியின் இடதுகரை பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண்ணில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தூர்வாரும் பணியை தொடங்கிவைத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாசன வசதி

மேட்டூர் அணை கட்டுமான பணி, 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1934-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்த காலகட்டத்தில், அணை கட்டுவதற்காக ரூ.4 கோடியே 80 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்க முடியும். அணையின் கொள்ளளவு 93.470 டி.எம்.சி. ஆகும். காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதி கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 14,300 சதுர மைல் ஆகும். அணையின் நீர்பரப்பு பகுதி 59.25 சதுர மைல்.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்போது, அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

புனரமைக்கும் பணி

மேட்டூர்அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளில், 38 ஆண்டுகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேட்டூர் மேற்குக்கரை கால்வாய் மைல் சரகம் 7,283 மீட்டர் முதல் 13,920 மீட்டர் வரை மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபுரி வட்டம், மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் கீழ் சரகம் 45,300 மீட்டர் முதல் 58,000 மீட்டர் வரை கால்வாய் புனரமைக்கும் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் சரபங்கா நதிக்கரையை பலப்படுத்தும் 3 ஏரிகள் மற்றும் 4 அணைக்கட்டுகள் புனரமைக் கும் பணிகள் ரூ.7 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அணைகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், மேட்டூர் அணையை புனரமைத்து மேம்பாடு செய்யும் பணி ரூ.10 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் முன்னேற்றத்தில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, பருவமழையின் போது கிடைக்கும் தண்ணீர் முழுவதும் சேமித்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

10 சதவீதம் கூடுதல் தண்ணீர்

கேள்வி:- மேட்டூர் அணையை தூர்வாருவதை வரவேற்றுள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இது காலம் கடந்த செயல் என்று கூறி இருக்கிறாரே?

பதில்:- 1934-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையை இதுவரை யாரும் தூர்வாரவில்லை. இப்போது குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும், விவசாயிகளுக்கு தேவையான நீரை சேமிப்பதற்கும் முதற்கட்டமாக இந்த அணையை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இதை விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்று இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 10 சதவீதம் கூடுதல் தண்ணீரை தேக்க முடியும் என்று பொறியாளர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு நாளில் முடியும்?

கேள்வி:- மேட்டூர் அணை எவ்வளவு நாட்களில் தூர்வாரி முடிக்கப்படும்?

பதில்:- இப்போதுதான் தூர்வார ஆரம்பித்து உள்ளோம். இந்த அணை எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த அணையில் இன்றைக்கு தூர்வார தொடங்கி இருக்கிறோம். விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு வண்டல்மண் தேவையோ, அந்த அளவுக்கு அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

கேள்வி:- மழைக்காலத்தில், இந்த வேலையில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இல்லை. ஏனென்றால், மழைக்காலம் வருவதற்கு இன்னும் நாள் இருக்கிறது. தூர்வாரும் பணி ஓர் ஆண்டில் முடியவில்லை என்றால் அடுத்த ஆண்டும் தொடரும்.

கேள்வி:- இதுபோல் மற்ற அணைகளும் தூர்வாரப் படுமா?

பதில்:- ஆமாம். மற்ற அணை களிலும் தூர்வாரப்படும்.

கவர்னர் நிராகரிப்பு

கேள்வி:- தமிழக கவர்னர், அரசு அளித்த துணைவேந்தர் பெயர்களை நிராகரித்திருக்கிறாரே?

பதில்:- கவர்னர் நிராகரிக்கவில்லை. அவர், சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நினைக்கின்றார். ஆகவே, அரசும் சிறப்பானவர்களை தேர்வு செய்யவேண்டும் என்று எண்ணுகின்றது. சிறந்த துணை வேந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய கருத்தும். அந்த அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறது.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மூலக்கதை