சிறிலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு!
சிறிலங்காவில் கடந்த மூன்று நாட்களாக நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் காணாமல் போனோரின் எண்ணிக்கை 112 அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 4 லட்சத்து 42 ஆயிரத்து 299 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.
அதற்கமைய இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் களுத்துறையில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 68 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, மாத்தறையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேகாலையில் இருவரும், ஹம்பாந்தோட்டையில் ஐவரும், காலியில் 8 பேரும், கம்பஹாவில் மூவரும், உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஆயிரத்து 638 பேர் 319 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.