ஐ.டி.சி., சந்தை மதிப்பு ரூ.10,872 கோடி அதிகரிப்பு
புதுடில்லி : ஐ.டி.சி., நிறுவனம், சந்தை மதிப்பில், 10 ஆயிரத்து, 872 கோடி ரூபாயை அதிகரித்துக் கொண்டுஉள்ளது.உள்நாட்டில், ஐ.டி.சி., நிறுவனம், ஓட்டல், நுகர்பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 2,669.47 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, அதற்கு முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2,380.68 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே கால ஒப்பீட்டில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 6.15 சதவீதம் உயர்ந்து, 14,138.78 கோடி ரூபாயில் இருந்து, 15,008.82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த காலாண்டில், ஐ.டி.சி., அதன் சந்தை மதிப்பை, 10,872 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தியுள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, 3,74,928.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின், வேளாண் பொருட்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் தனிநபர் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை, கடந்த காலாண்டில் அதிகரித்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த அளவில் சிறப்பான வளர்ச்சி கிடைத்துள்ளது’ என்றார்.