மாநகராட்சி அலுவலகத்தை ஆக்கிரமித்து 'மாஜி' கவுன்சிலரின் கார் பார்க்கிங்

தினமலர்  தினமலர்
மாநகராட்சி அலுவலகத்தை ஆக்கிரமித்து மாஜி கவுன்சிலரின் கார் பார்க்கிங்

புளியந்தோப்பு;திரு.வி.க., நகர் மண்டல மாநகராட்சி அலுவலகம், முன்னாள் கவுன்சிலரின் கார் பார்க்கிங்காக மாறியதால், மக்கள் நலத்திட்ட முகாம் நடத்த முடியாமல், அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை மாநகராட்சி, திரு.வி.க., நகர், நியூ பேரன்ஸ் சாலையில், மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகம் உள்ளது.புளியந்தோப்பு, ஓட்டேரி பகுதிகளைச் சேர்ந்த மக்களின் புகார் மற்றும் குறைகளை, இந்த அலுவலகத்தில் தான் தெரிவிக்க வேண்டும்.
இந்த அலுவலகத்தில், முன்னாள் கவுன்சிலர் சுகுமாறன் தன் காரை நிறுத்தி உள்ளதால், அம்மா முகாம் நடத்த இடமில்லாமல், கடந்த மாதம் பல மணி நேரம் காத்திருந்த வருவாய் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.இது மட்டுமின்றி, அவரது காரில் சிறு கீறல்கள் விழுந்தாலும், அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.இதே போல், 75வது வார்டு, வேங்கடாத்ரி தெருவில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில், முன்னாள் கவுன்சிலர் சந்தானகிருஷ்ணன் காரை நிறுத்தியுள்ளார்.இதனால், இந்த இரண்டு மாநகராட்சி அலுவலகங்களும் கார் பார்க்கிங்காக மாறியுள்ளதால், மக்கள் நலப் பணிகளை செய்ய முடியாமல் அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மூலக்கதை