மாடுகளை விற்க மத்திய அரசு தடை தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு: விவசாயிகள் மறியல்; சீல் வைக்க வந்த அதிகாரிகள் சிறை பிடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாடுகளை விற்க மத்திய அரசு தடை தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு: விவசாயிகள் மறியல்; சீல் வைக்க வந்த அதிகாரிகள் சிறை பிடிப்பு

சென்னை :இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதற்கு மாட்டு வியாபாரிகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சியில் மாட்டிறைச்சி கூடத்துக்கு இன்று சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை விற்பதற்கு நேற்று மத்திய அரசு தடை விதித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. பண்ணை உரிமையாளர்கள் மட்டுமே சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும்.

விவசாய தேவைக்காக மட்டுமே கால்நடைகள் விற்கப்பட வேண்டும். கால்நடைகளைவாங்கியவர்கள் 6 மாத இடைவெளிக்குள் அவற்றை விற்பனை செய்யக் கூடாது உள்பட பல்வேறு அம்சங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், 23 பக்கங்கள் கொண்ட 50க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.   அரசாணையை சமீபத்தில் காலமான முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கையெழுத்திட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த ஆணையால், இறைச்சி விற்பனையாளர்களும், தோல் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தோல் வர்த்தக நிறுவனங்களின் 90 சதவீத தேவை வார சந்தை, மாட்டு சந்தைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

தற்போது மத்திய அரசின் உத்தரவால் இனி பெரும்பாலான தோல் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏழை விவசாயிகள் கறவை மாடுகள் அல்லாதவற்றை வருமானத்திற்காக விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்களும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 210 கால்நடை சந்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ₹16,250 கோடிக்கு தோல் மற்றும் காலணி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள 400 தோல் தொழிற்சாலைகளில் சுமார் 1. 5 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் இறைச்சி வர்த்தகம், ₹1 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்படும்.

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மறியல்இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை  தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

இங்கு கடலூர், விழுப்புரம்,  பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட  பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை கொண்டு வந்து  விற்பனை செய்து வந்தனர். கேரளா, தேனி, கம்பம், பொள்ளாச்சி உள்ளிட்ட  வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பெரு வியாபாரிகள்  சந்தைக்கு வந்து ஆடு, மாடுகளை வாங்கி செல்வர்.

இந்நிலையில்  இன்று 600க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

மாடுகளை விற்க நேற்று மத்திய அரசு தடை விதித்ததால், தியாகதுருகம் சந்தைக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த  வியாபாரிகள் மாடுகளை வாங்க வரவில்லை. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை  சேர்ந்த ஒரு சில வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு மாடுகள் வாங்க  வந்திருந்தனர்.

மாடுகள் வரத்து அதிகரிப்பு மற்றும் வியாபாரிகள் வருகை  குறைவு காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு மாடுகள் விலை போகவில்லை. இதனால்  மாடுகளின் விலை கடுமையாக சரிந்தது. அடிமட்ட விலைக்கு கேட்கப்பட்டதால்  ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 200 பேர் தங்களது மாடுகளுடன் சேலம் - சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீல் வைக்க எதிர்ப்புதிருச்சி பொன்மலை ஜி. கார்னரில் உள்ள மாநகராட்சி மாட்டிறைச்சி கூடத்தை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன், உதவி செயற்பொறியாளர் பக்ருதீன் ஆகியோர் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஒப்பந்ததாரர் சுயப்பு அகமது தலைமையில், முன்னறிவிப்பின்றி வந்ததற்கு கண்டனம் ெதரிவித்து  அதிகாரிகளை சிறைபிடித்ததோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அத்தோடு, உதவி ஆணையர் வைத்தியநாதனை இறைச்சிக்கூடத்துக்குள் வைத்து பூட்டு போட்டு வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் அங்கு வந்து, அவரை மீட்டனர். இதையடுத்து, சீல் வைக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல, மாட்டு சந்தை நடக்கும் நாட்களில் பிரச்னைகள் ஏற்படலாம் என்று போலீசார் கருதுவதால், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் ஆணைக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை