குடிநீர் கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி கந்தன்சாவடி 15வது மண்டலம் 196வது வார்டுக்கு உட்பட்டஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதமாக தெருக்குழாயில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
லாரி மூலம் வழங்கப்பட்டு குடிநீர், போதுமானதாக இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெத்தேல்நகர் பாதுகாப்பு பேரவை மகளிரணி சார்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நீலாங்கரை போலீசார் சமாதானம் பேசினர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் பலகோடி செலவில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஒராண்டு ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி பல்வேறு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.