அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா: கார்ப்பரேட் நிறுவனங்கள் கணிப்பு
மும்பை : ‘இந்தியா, வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள், வளர்ந்த நாடுகளின் வரிசைக்கு முன்னேறும்’ என, கார்ப்பரேட் நிறுவனங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, சி.பி.ஆர்.இ.,இந்தியா, உள்நாட்டைச் சேர்ந்த, 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில், நாட்டின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் பங்கேற்ற, 500க்கும் அதிகமான உயரதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: உலகில், மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக, இந்தியா விளங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதம் என்றளவில் உள்ளது. உலகில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு உகந்த, ‘டாப் – 5’ நாடுகளில், இந்தியா இடம் பெற்றுள்ளது. வரும், 2020ல், அதிகளவில் இளைஞர்கள் உள்ள நாடாகவும், இந்தியா உருவெடுக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக, அடிப்படை கட்டமைப்பு தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானம் ஆகியவை உள்ளன. இத்துடன், முதலீடுகளை ஈர்க்கக் கூடிய வசீகரமும் ஒரு நாட்டிற்கு தேவை. முதலீடுகளை ஈர்ப்பதில், இந்தியா சிறந்து விளங்குகிறது. எனினும், கட்டுமானங்களை திட்டமிடுவது, குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை முடிப்பது போன்றவற்றில், இந்தியா இன்னும் சர்வதேச நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாமல் உள்ளது.
கட்டுமான துறை, அமைப்பு சார்ந்த துறையாக மாறினால், இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என, ஆய்வில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். அதே சமயம், கட்டுமான துறையின் அனைத்து நிலைகளிலும், திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக, பெரும்பாலானோர் கூறியுள்ளனர். பெரும்பான்மையான கட்டுமான நிறுவனங்கள், திட்டங்களை ஆழமாக புரிந்து கொண்டு மேம்படுத்த, போதுமான நிர்வாக திறனின்றி உள்ளன. கட்டுமான துறையில், திறமையானவர்களின் பற்றாக்குறையை போக்க, அரசு, தனியார் துறையுடன் இணைந்து, தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இத்தகைய அம்சங்களுடன், இதர துறைகளின் வளர்ச்சியும் சேரும் போது, இந்தியா, வளர்ந்த நாடுகளின் வரிசையில் இடம் பிடிக்கும் என, 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். எனினும், ஆய்வில் பங்கெடுத்தவர்களில், 70 சதவீதம் பேர், இந்தியா, மிகச் சிறந்த முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ள போதிலும், வளர்ந்த நாடாக முன்னேற நீண்ட காலமாகும் என, கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா, வளர்ந்த நாடுகளுக்கு நிகராக, கட்டுமான துறையில் வளர்ச்சி காண, ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை:
* சீரிய நிர்வாகம் மற்றும் கொள்கை அமலாக்கம்
* பயன்தரக் கூடிய கட்டுமான மேலாண்மை
* புதிய கட்டுமான நடைமுறைகள், தொழிற்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு
* தரமான பொருட்கள் மற்றும் கட்டுமான உத்திகள்
* திறமையான பணியாளர்கள்
-அன்ஷூமன் மேகசின், தலைவர், சி.பி.ஆர்.இ., இந்தியா