‘பாயின்ட் ஆப் சேல்’ சாதனங்கள்; 3 மாதங்களில் 12.54 லட்சம் விற்பனை
புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் விளைவாக, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் வாயிலான பணப் பரிவர்த்தனைக்கு உதவும், ‘பாயின்ட் ஆப் சேல்’ சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
கடந்த ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், 12.54 லட்சம் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. 2016 நவ., 8 நிலவரப்படி, 15.19 லட்சம் பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் புழக்கத்தில் இருந்தன. இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, மொத்த சாதனங்கள் எண்ணிக்கை, 27.73 லட்சமாக உயர்ந்துள்ளது. கிராமங்களிலும் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 2.04 லட்சம் பாயின்ட் ஆப் சேல் சாதனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும், இவ்வகை சாதனங்களின் பயன்பாட்டை பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.