அரசு அலுவலகமாக மாறுகிறது டில்லி ஜன்பத் ஓட்டல்
புதுடில்லி : டில்லியில் உள்ள, ஜன்பத் ஓட்டலை மூடவும், அதை, அரசு அலுவலகமாக பயன்படுத்தவும், மத்திய அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு, பல மாநிலங்களில், சொந்தமாக ஓட்டல்கள் உள்ளன. லாபகரமாக செயல்படாத ஓட்டல்களை, தனியாருக்கு குத்தகைக்கு விடுதல், பங்குகளை விற்று வெளியேறுதல் உள்ளிட்ட, பல முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக, போபாலில் உள்ள, ஓட்டல் லேக் வியூ அசோக்; கவுகாத்தியில் உள்ள, ஓட்டல் பிரம்மபுத்ரா அசோக், பரத்பூரில் உள்ள, ஓட்டல் அசோக் ஆகிய மூன்று ஓட்டல்களின் பங்குகளை விற்று அதிலிருந்து வெளியேற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, ஜன்பத் ஓட்டலை மூடும் முடிவை அரசு எடுத்துள்ளது.
இது குறித்து, சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லியின் மைய பகுதியில், ஜன்பத் ஓட்டல் அமைந்துள்ளது. அதை, அரசு அலுவலக கட்டடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், வாடகை கட்டடங்களில் செயல்படும், அரசு அலுவலகங்களின் செலவு குறையும். இதற்காக, ஜன்பத் ஓட்டலின் சொத்துகளை, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு மாற்ற, மத்திய அமைச்சரவை, கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.