கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுடில்லி : கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா துவக்கி வைத்தார். அத்திட்டத்துக்கு, தீன்தயாள் உபாத்யாயாவின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு, தொலை தொடர்பு சாதனங்களை கையாளும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மொபைல் போன் கோபுரங்களை பராமரிப்பது, பழுது சரிசெய்வது, ‘ஆப்டிகல் பைபர்’ பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும்.
முதற்கட்டமாக, சோதனை முறையில், பீஹார், ஒடிசா, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களில், 10 கிராமங்களில், 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஏழு கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இதை தொடர்ந்து, நாடு முழுவதும், பயிற்சி திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், திறன்மிக்கவர்களாக மாறுவர். மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும், இணையதள சேவை கிடைக்க திட்டமிட்டு உள்ளது. 2018 டிசம்பருக்குள், ‘பாரத் நெட்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 60 கோடியாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.