தனியார் வங்கிகளின் வாராக்கடன் 72 சதவீதம் உயர்வு
மும்பை : கடந்த நிதியாண்டில், தனியார் வங்கிகளின் வாராக்கடன், 72 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், அனைத்து வங்கிகளின் மொத்த வாராக்கடன், 29.1 சதவீதம் அதிகரித்து, 7.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 5.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் மொத்த வாராக்கடன், முறையே, 25 சதவீதம் மற்றும் 72.46 சதவீதம் அதிகரித்துள்ளன. தனியார் துறையில், ஆக்சிஸ் வங்கியின் வாராக்கடன், இரு மடங்கு உயர்ந்து, 6,088 கோடி ரூபாயில் இருந்து, 21,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, யெஸ் பேங்க் ஆகியவற்றின் வாராக்கடனும் உயர்ந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தனியார் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளதற்கு, அதுபோன்ற கடன்களை வரையறுப்பதற்கான அளவீட்டை, வங்கிகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது தான் காரணம்.
வங்கிகளின் வாராக்கடன் உயர்ந்த போதிலும், கடந்த நிதியாண்டில், 6,039.30 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. அவை, முந்தைய நிதியாண்டில், 23,091.50 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில், தனியார் துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா மற்றும் சிட்டி யூனியன் வங்கிகள் சேர்க்கப்படவில்லை. எஸ்.பி.ஐ.,யின் துணை வங்கிகள், மூன்றாம் காலாண்டு நிலவரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.