காஷ்மீர் எல்லையில் அதிரடி: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 3 வீரர்கள் வீர மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் எல்லையில் அதிரடி: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 3 வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. காஷ்மீரில் குப்வாரா மாவட்டம்  நவ்காம் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியின் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான படையினர் குவிக்கப்பட்டு அங்கு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இந்த சூழலில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.



நேற்று முன்தினமும், நேற்றும் தொடர்ந்து இரு நாட்களாக அப்பகுதியில் நீடித்த சண்டை காரணமாக பதற்றம் நிலவியது. இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், நவ்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அதே போல் நேற்று மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றனர். இதனால் அப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது.



மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி , வெடிபொருட்கள் உள்பட ஏராளமான ஆயுதங்களை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சண்டையில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

.

மூலக்கதை