ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்கள் வருவாய் உயரும்
மும்பை : ‘ஆரோக்கிய பராமரிப்பு துறையில் உள்ள, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய், நடப்பு நிதியாண்டில், 15 சதவீதம் வளர்ச்சி காணும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம், ஆரோக்கிய பராமரிப்பு துறை குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த, 2016 – 17ம் நிதியாண்டின், முதல் அரையாண்டில், நிறுவனம் கணித்தபடி, ஆரோக்கிய பராமரிப்பு துறையின் வருவாய், 15 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. எனினும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், மூன்றாம் காலாண்டில், இந்த வளர்ச்சி, 10 சதவீதமாக குறைந்தது. நான்காவது காலாண்டில், இயல்பு நிலை திரும்பியதால், ஓரளவு வளர்ச்சி காணப்பட்டது.
நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஆரோக்கிய பராமரிப்பு துறையில் உள்ள, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய், 15 சதவீதம் வளர்ச்சி காணும். அப்பல்லோ ஆஸ்பிடல்ஸ், 2018 – 19ம் நிதியாண்டில், நோயாளிகளுக்காக, கூடுதலாக, 1,049 படுக்கைகளை இணைக்க உள்ளது. அது போல, நாராயண ஹிருதயலயா நிறுவனம், 2019 – 20ம் நிதியாண்டில், 647 படுக்கைகளை சேர்க்க உள்ளது.
மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் நிறுவனம், 1,000 படுக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. குவாலிட்டி கேர் இந்தியா நிறுவனம், 2020 மார்ச்சுக்குள், புதிதாக, 620 படுக்கைகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், ஆரோக்கிய பராமரிப்பிற்கு தீவிர முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அரசு காப்பீட்டு திட்டங்களின் கீழ், அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணிகள், ஆரோக்கிய பராமரிப்பு துறையின் வளர்ச்சிக்கு, துணை புரிந்து வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.