குழந்தைகளுடன் உரையாடுவது பெரிய மகிழ்ச்சி : இமான் அண்ணாச்சி

தினமலர்  தினமலர்
குழந்தைகளுடன் உரையாடுவது பெரிய மகிழ்ச்சி : இமான் அண்ணாச்சி

சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இமான் அண்ணாச்சி. இந்த நிகழ்ச்சி குழந்தைகள் மத்தியில் பிரபலமாகி விட்டதால் சினிமாவில் பிசியானபோதும் சின்னத்திரையை விடாமல் தொடர்ந்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். பின்னர் சினிமாவில் பிசியாகி விட்டேன். என்றாலும் நான் வளர காரணமாக இருந்த சின்னத்திரையை விட மனசில்லை. அதனால்தான் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்களித்து வருகிறேன். அதோடு அந்த நிகழ்ச்சிதான் என்னை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தது. சினிமா நடிகராக மட்டுமே இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு சிறுசுகள் மத்தியில் பிரபலமாகியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.

மேலும், இப்போது நான் நடத்தி வரும் குழந்தைகள் நிகழ்ச்சி 5 ஆண்டுகளாகி விட்டது. அதனால் அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் ஏதேனும் மாற்றம் வந்தாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோகூட நான் வேறு ஏதேனும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டே இருப்பேன். காரணம், மழலைகளுடன் உரையாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறார் இமான் அண்ணாச்சி.

மூலக்கதை