கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி மரணத்தில் மர்மம்: சி.பி.ஐ விசாரணை நடத்த குடும்பத்தினர் கோரிக்கை
லக்னோ: கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரசிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த அனுராக் திவாரி கர்நாடக மாநில உணவு மற்றும் பொது விநியோக துறையில் ஆணையராக பணியாற்றி வந்தார். கடந்த 17-ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்ட அவர் லக்னோ அருகே சாலையில் சடலமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணை நடத்தக்கோரி பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அவர்கள், மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அனுராக் திவாரி மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.