பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி
தின்டோரி: மத்தியப் பிரதேசத்தில் அதிகாலையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள், 24 பேர் காயமடைந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று தின்டோரி நோக்கி சென்றுகொண்டிருந்து. நேற்று அதிகாலை 4 மணியளவில் ஜோகிடிகரியா பகுதியில் பேருந்து வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 24 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த கோட்வாலி போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து ஏற்பட்டதை அடுத்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.