20 சி.ஐ.ஏ., ஏஜன்ட்கள் சீனாவில் படுகொலை
வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் ஏஜன்ட்களை, கொலை செய்வதன் மூலம், தன் நாட்டில் அவர்களின் பணிகளை முடக்கும் வேலையில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.அமெரிக்காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., சர்வதேச அளவில் வலிமை வாய்ந்தது; உலகம் முழுவதும் தகவல்களை சேகரிப்பதுடன், அமெரிக்காவிற்கு ஆதரவாக ராஜதந்திர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும், சி.ஐ.ஏ., ஊடுருவி வருகிறது. ஆனால், 2010ல் இருந்து சீனாவில், அதன் செயல்பாடு வெகுவாக குறைந்து வருகிறது.
சீனாவில், சி.ஐ.ஏ.,யின் செயல்பாடுகளை முடக்க, அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இதுகுறித்து சி.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகளை முடக்கும் விதத்தில், 2010 முதல், சீனா செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சி.ஐ.ஏ.,விற்கு தகவல் தரும் ஏஜன்ட்களை கொலை செய்வதுடன், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து
வருகிறது. சீனாவில், இரண்டு ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்ட, சி.ஐ.ஏ., ஏஜன்ட்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்; பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு இடையிலான தொடர்புகளை துண்டிக்கும் வகையிலும், நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், சீனாவில், சி.ஐ.ஏ.,யின் பணிகள் முடங்கியுள்ளன. சீனா பற்றிய தகவல்களை திரட்டுவதிலும், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த
வட்டாரங்கள் கூறின.