பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜெர்மன் பெண் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில், வெளிநாட்டினர் தங்கியிருந்த விடுதியில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்; தாக்குதலில், ஆப்கன் வீரரும் உயிரிழந்தார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு, அமெரிக்க கூட்டணி படைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தலிபான்கள் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில், வெளிநாட்டினர் தங்கி இருக்கும் விடுதி ஒன்றில், பயங்கர வாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்; பயங்கரவாதிகளின் தாக்குதலில், ஆப்கன் வீரர் ஒருவரும் உயிரிழந்தார். இதனிடையே, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் கடத்திச் சென்றனர்.
20 போலீசார் பலி : ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 20 போலீசார் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில், மஸார் - -இ - -ஷெரிப் பகுதியில் ராணுவ முகாம் மீது, ஏப்ரலில் தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்; இதில், 135 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், அங்கு, தலிபான்களுக்கு எதிராக, கூடுதல் படைகளை களமிறக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், ஜபூல் மாகாணத்தின் பல பகுதிகளில், நேற்று போலீஸ் சோதனை சாவடிகள் மீது, ஒரே நேரத்தில், தலிபான் பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில், 20 போலீசார் கொல்லப்பட்டனர்; மேலும், 15 பேர் காயமடைந்தனர்.