லா சப்பலுக்கு பெண்கள் வரமுடியாத நிலை - துரித நடவடிக்கையில் காவல்துறை
பரிஸ் லா சப்பல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெண்கள் மீது தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் முறைப்பாடு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் அமைப்புக்கள் சில சேர்ந்து மேற்கொண்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கையெழுத்திட்டு, முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார்கள்.
இன்று பிரெஞ்சு ஊடகங்களில் வெளியான இச் செய்தி உடனடியாகவே பரிஸ் மேயர் ஆன் இதால்கோவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
லா சப்பல் பகுதி மற்றும் Rue Pajol பகுதி போன்றவற்றில் பல ஆண்கள் கூட்டம் கூட்டமாக நின்று பெண்கள் மீது பல்வேறு சேட்டைகள் புரிவதாகவும், தகாத வார்த்தைகள் சொல்லி அழைப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
'இதுகுறித்து நாம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்பகுதியில் உடனடியாகவே காவல்துறையினரின் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று பரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.
குறிப்பாக லா சப்பல் மெற்றோவுக்கு அருகில் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.