1500 கோடியைக் கடந்தது பாகுபலி 2 வசூல்
பாகுபலி 2 படம் மூன்று வாரங்களுக்கு முன்பு ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்தது. படம் வெளியான நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல புதுப்புது சாதனைகளை இந்தப் படம் படைத்துக் கொண்டே வந்தது.
நேற்றுடன் முடிவடைந்த மூன்று வார நாட்களில் இப்படம் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை இப்படம் இந்தியாவில் 1225 கோடியும், வெளிநாடுகளில் 275 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று வாரம் முடிந்த பின்னும் இன்னும் பல ஊர்களில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய மாநகரங்கள், மாநகரங்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் விடுமுறை நாட்களில் படத்திற்கு முன்பதிவு பரபரப்பாகவே உள்ளது.
இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் வசூலிக்காத ஒரு தொகையை பாகுபலி 2 வசூலித்துள்ளது. 1500 கோடியைக் கடந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்கள் இப்படம் ஓடினால் 2000 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது.